தர்பூசணி கோடைக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும் ஒரு சிறந்த பழமாகும்.
தர்பூசணியில் சுமார் 90 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால், உடல் வெப்பத்தை குறைத்து நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்து நிறைந்த பழம்
தர்பூசணியில் விட்டமின் A, C, B1, B6, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், லைகோபின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
இதயமும், ரத்த அழுத்தமும் பாதுகாப்பு
நிபுணர்கள் கூறுவதாவது, தர்பூசணியில் உள்ள லைகோபின் மற்றும் பொட்டாசியம் சேர்ந்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும் என்பதுடன், இதய நோய் அபாயமும் குறைகிறது.
எடை குறைப்புக்கு உதவி
நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளதால், தர்பூசணி உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாகும். இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
விட்டமின் C அதிகமாக உள்ளதால், தர்பூசணி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் B சத்துக்கள், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
சிறுநீரக மற்றும் தசை நலன்
தர்பூசணி சிறுநீரக செயல்பாட்டை சீராக்கி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் தசை வலியை குறைக்கும் ‘சிட்ரூலின்’ என்ற அமினோ அமிலமும் இதில் உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை
தர்பூசணி இனிப்பு சுவையுடன் இருப்பதால், அதில் அதிக சர்க்கரை உள்ளது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், 100 கிராம் தர்பூசணியில் சுமார் 6.2 கிராம் அளவிலேயே சர்க்கரை உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் அளவுக்கு மீறாமல் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எச்சரிக்கைகள்
சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
கர்ப்பிணிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள், மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக, தர்பூசணி கோடைக்காலத்தில் உடலை குளிர்வித்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் சிறந்த இயற்கை உணவாகும். ஆனால், எந்த உணவாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்
