மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவியின் தாக்கம் இன்று வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடத்து இதன் தாக்கம் அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயம்.
நவீன காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகள் வீட்டுக்குள்ளே இருக்கும் நிலையும் உள்ளது. குழந்தைகளை கவனிக்க அவர்களுடன் நேரம் செலவழிக்க பெரியவர்கள் இல்லாத நிலையில் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு திரை நேரம் மட்டுமே. பொழுதுபோக்கு என்ற நிலையை தாண்டி அவர்களின் வாழ்க்கையே மாற்றுகின்றது. குறிப்பாக கவனச் சிதறல், சிந்தனைத் திறன் குறைவது போன்ற அறிவாற்றல் சார்ந்த பிரச்சனைகள், மனதில் உள்ளதை யாரிடமும் வெளிப்படுத்தாது ஒரு பக்க பேச்சு( one side communication) உலகில் வாழ தொடங்கி விடுகிறார்கள்.
0 -2 வயது குழந்தைகள் மிகவும் கவனிக்க படவேண்டியவர்கள். 0-2 வயதில் மூளையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த வயதில் கதைகள், பாடல்கள், தகவல்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே காண்பிக்கும் போது அவர்களது கற்பனைத்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதேநேரம் வாய்வழி கதைகள் கூறும் போது கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு சிந்திக்கும் ஆற்றலும் அதிகமாகும்.
மொபைல் அதிகம் பார்க்கும் குழந்தைகளின் பேச்சு திறன் தாமதமாக உள்ளதாவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிச் செல்லும் குழந்தைகளிடையே நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கும் திரை நேரமே முக்கிய காரணமாக அமைகிறது.
திரை நேரத்திற்கு மாற்றாக, விளையாட்டுகள், கதை புத்தகங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை குழந்தைகள் மனதில் விதைப்பதன் மூலமாக நல்ல வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
