இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தியானம் என்பது வெறும் ஆன்மீகப் பயிற்சி மட்டுமல்ல, அது மனதைக் கூர்மைப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், மிக முக்கியமாகப் பொறுமையைக் கையாளவும் உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.
குறிப்பாக, மனநலச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் தியானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பலருக்கு இரவு நேரங்களில் சரியாகத் தூக்கம் வராதது ஒரு பெரும் குறையாக உள்ளது. அத்தகைய தூக்கமின்மைப் பிரச்சனைக்குத் தியானம் எவ்வாறு மருந்தாகிறது என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
தூக்கமும் தியானமும்: ஆரோக்கியத்திற்கான பாலம
நல்ல ஆரோக்கியத்திற்குத் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். ஆனால், நம்மில் பலருக்குப் படுக்கைக்குச் சென்றவுடன் உறக்கம் வருவது சவாலாக இருக்கிறது. சுகாதார நிபுணர்களின் அறிவுரைப்படி, இரவில் உறங்குவதற்கு முன்பாகத் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் வியக்கத்தக்க நன்மைகளைத் தருகிறது.
கண்களை மூடிக்கொண்டு மெதுவாகச் சுவாசிக்கும்போது, அது இதயத் துடிப்பை முறைப்படுத்துவதுடன், மூளையின் உணர்ச்சி மையத்தை அமைதிப்படுத்தி நம்மை உறக்கத்திற்குத் தயார் செய்கிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன் மாற்றங்கள்
பகல் முழுவதும் நாம் எதிர்கொள்ளும் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இரவு நேரத் தியானம் இந்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து மூளைக்கு முழுமையான ஓய்வை அளிக்கிறது.
இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தேவையற்ற கவலைகள் மற்றும் உடல் சோர்விலிருந்து நம்மை விடுவிக்கிறது. தசைகளைத் தளர்த்தி உடல் பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், மனம் இலகுவாகி மிக எளிதாக உறக்கம் வந்துவிடுகிறது.
மூளை அலைகளின் மாற்றமும் சீரான உறக்கமும்
தியானம் செய்வதன் மூலம் மூளையின் செயல்பாடானது வேகமான அலைகளிலிருந்து மெதுவான, அமைதியான ஆல்பா அலைகளுக்கு மாற்றமடைகிறது. இது மூளையில் உள்ள அமிக்டாலா பகுதியை அமைதிப்படுத்துவதால், உறக்கத்தின் போது திடீரென விழிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சிலருக்கு இடையில் தூக்கம் கலைந்து மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை இதனால் குறைகிறது. தினசரி இந்த எளிய பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனநிலை மேம்படுவதோடு, உடல் ரீதியான புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
