புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் பெரும்பாலான நேரத்தைத் தூக்கத்திலும், தாய்ப்பால் குடிப்பதிலும் கழிக்கின்றனர். முதல் சில மாதங்களுக்குக் குழந்தைகளுக்கு எனத் தனி தூக்க அட்டவணை ஏதும் கிடையாது. இதனால், அவர்கள் பெரும்பாலும் பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு, இரவில் விழித்திருப்பார்கள். பகல், இரவு வித்தியாசத்தை அவர்கள் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும், இது முற்றிலும் இயல்பானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூக்கத்தின் அளவு மற்றும் உணவூட்டல்
குழந்தைகள் நல மருத்துவர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு மொத்தம் 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும். இது ஒரே நேரத்தில் தூங்குவதில்லை, மாறாகச் சிறிய இடைவெளிகளாகப் பிரிக்கப்படுகிறது. குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால், ஒவ்வொரு 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் தூக்கம் அடிக்கடி தடைபடும். பொதுவாக, 3 மாதங்களுக்குப் பிறகு தூக்கத்தின் தன்மை மாறி, 6 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக மாறும்.
வளர்ச்சியில் தூக்கத்தின் பங்கு
குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் லேசான தூக்கம் (REM) மற்றும் ஆழ்ந்த தூக்கம் (Non-REM) என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. REM நிலையில் குழந்தைகள் லேசான அசைவுகளுடன் தூங்குவார்கள். இருப்பினும், குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகத் தூங்கினால், காய்ச்சல் அல்லது தொற்று ஏதேனும் உள்ளதா எனப் பரிசோதிக்க உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
