முன்பெல்லாம் முதியவர்களுக்கான பாதிப்பாகக் கருதப்பட்ட உயர் ரத்த அழுத்தம், தற்போது 35 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களிடையே வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது குறித்துப் பேசிய அமெரிக்க இதயநலச் சங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எடுவார்டோ சான்ச்செஸ், உயர் ரத்த அழுத்தம் என்பது வெறும் பாதிப்பு மட்டுமல்ல, அது இதயம், மூளை மற்றும் சிறுநீரகச் செயல்பாடுகளைச் சிதைக்கும் ஒரு காரணி என்று எச்சரிக்கிறார். பக்கவாதம் மற்றும் தீவிர இதய நோய்களில் இருந்து தப்பிக்க ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது காலத்தின் கட்டாயம்.
அளவீடும் விழிப்புணர்வும்
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு ரத்த அழுத்தம் 120/80 mm Hg என்ற அளவில் இருப்பதே பாதுகாப்பானது. இதற்கு மேல் அதிகரிக்கும் போது ரத்த நாளங்கள் சேதமடைந்து முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து உங்கள் உடல் நிலையைக் கண்காணிப்பது அவசியம். குறிப்பாக, குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்ட வரலாறு இருந்தால், மரபியல் ரீதியாக உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனம் தேவை.
வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமான ஆயுதமாகும். பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், ஆரஞ்சு, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் உப்பின் அளவைக் குறைக்க உதவும். அதேபோல், மது மற்றும் புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதுடன், உப்பின் அளவைக் குறைப்பதும் அவசியம். முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் மூலம் உடல் எடையையும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தினால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கலாம்.
மருந்தின் முக்கியத்துவம்
உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு அடுத்தபடியாக, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வது உயிரைக் காக்கும். மருந்துகளால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை; மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதன் மூலம் மாற்று மருந்துகளைப் பெற்று ரத்த அழுத்தத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
