தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஹீட் ஸ்ட்ரோக் (வெப்பவாதம்) ஏற்படும் அபாயம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிகுறிகள்
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் முன்,உடலின் வெப்பநிலையானது 104 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 40 டிகிரி செல்சியஸ்) அல்லது அதற்கு மேல் உயர்தல், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், சிவந்த தோல், வேகமான இதயத்துடிப்பு, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலைக்கு உடனடி சிகிச்சை பெறாவிட்டால், முக்கிய உடல் உறுப்புகள் செயலிழப்பு, நீரிழப்பு, வலிப்பு மற்றும் உயிரிழப்பு போன்ற தீவிர விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
பாதிப்பு அதிகம் உள்ளவர்கள்
சிறுவர் மற்றும் கைக்குழந்தைகள், முதியோர்கள் , நீண்ட நேரம் வெளியில் வேலை செய்பவர்கள், மற்றும் இதயம் அல்லது நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் அதிக ஆபத்து உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். குறிப்பாக, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் வெயிலில் இருப்பது ஹீட் ஸ்ட்ரோக்கிற்கான முக்கிய காரணமாகும்.
முதலுதவி
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்திற்கு மாற்றி, குளிர்ந்த நீர் கொண்டு உடலை துடைக்க வேண்டும். தேவையெனில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதேசமயம், விரைவாக மருத்துவ உதவி பெறுவதும் அவசியமாக கருதப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
கோடைக்காலத்தில் தளர்வான மற்றும் வெளிர் நிற உடைகளை அணிய வேண்டும். அதிக அளவில் தண்ணீர் மற்றும் குளிர்ந்த திரவங்களை அருந்த வேண்டும். வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்து, இடையிடையே நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும். மேலும், தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க முடியும்.
மருத்துவர்கள் அறிவுறுத்துவதாவது, ஹீட் ஸ்ட்ரோக் அபாயம் அதிகமாக உள்ள சூழலில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, அவசர மருத்துவ சேவைகளை உடனுக்குடன் பெற தயாராக இருக்க வேண்டும்.
