அன்பு, மன்னிப்பு மற்றும் சகோதரத்துவத்தைப் போதித்த இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் பாவங்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்த நிகழ்வை உலகம் இன்றும் நன்றியுடன் நினைவுகூர்கிறது. பொய் வழக்குகளும் சித்திரவதைகளும் அவர் மீது சுமத்தப்பட்ட போதிலும், சிலுவையில் தொங்கியபடி தமக்குத் தீங்கு செய்தவர்களுக்காகவும் அவர் இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். அவர் சிலுவையில் உயிர்நீத்த அந்தத் துக்ககரமான தினம் 'புனித வெள்ளி' என்று அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல் பாறைக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, அதிகாரிகளின் பலத்த காவலுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்தது.
மரணத்தை வென்ற உயிர்ப்பு
இயேசு முன்னரே அறிவித்தபடி, அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது. மரணத்தின் தளைகளைத் தகர்த்துவிட்டு அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். அதிகாலையில் அவரது உடலுக்கு நறுமணத் தைலம் பூசச் சென்ற சீடர்கள், கல்லறை திறந்திருப்பதையும் அங்கிருந்த வானதூதர்கள் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அறிவிப்பதையும் கண்டு வியந்தனர். இந்த மகத்தான நிகழ்வே 'ஈஸ்டர்' அல்லது 'உயிர்ப்பு ஞாயிறு' என்று உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
நம்பிக்கையின் விடியல்
தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் இந்தத் திருநாள், மனித வாழ்க்கையில் வரும் துன்பங்கள் தற்காலிகமானவை என்பதை உணர்த்துகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலத்தை மேற்கொண்ட கிறிஸ்தவர்கள், சனிக்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர் புதிய ஒளி ஏற்றப்பட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதிய வாழ்வின் அடையாளமாக வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகளைப் பரிமாறிக்கொண்டு, இயேசுவின் உயிர்ப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
