குறிப்பாக உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடும்போது கொய்யாவின் சுவை இன்னும் அதிகரிக்கும். ஆனால் இந்த சின்ன பழத்தின் உள்ளே மறைந்திருப்பது அளவற்ற ஆரோக்கிய நன்மைகள் என்பது பலருக்குத் தெரியாது.
ஊட்டச்சத்துகளின் களஞ்சியம்
கொய்யா பழம் விட்டமின் சி, நார்சத்து, பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகும். ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிக விட்டமின் சி கொண்டதாகக் கருதப்படும் இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது.
மேலும், கொய்யாவில் உள்ள நார்சத்து செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. வயிற்று கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது இயற்கையான மருந்தாகவே செயல்படுகிறது. அதே நேரத்தில், சிலருக்கு விதையுடன் சாப்பிடும்போது வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தேவையெனில் விதைகளை நீக்கி சாப்பிடுவது நல்லது.
நோய்களை தடுக்கும் பண்பு
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளும் சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
குறைந்த கலோரி மற்றும் அதிக நார்சத்து கொண்டதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் கொய்யா ஒரு சிறந்த தேர்வாகும். அதேபோல், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் லைகோபின் போன்ற மூலக்கூறுகள் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ளவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைக்கும்
கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான போலிக் ஆசிட் (விட்டமின் B9) இதில் இருப்பதால், கருவில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. மேலும், மன அழுத்தம் குறைக்கவும் உடல் சோர்வை நீக்கவும் கொய்யா பயனுள்ளதாகும்.
அதே சமயம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் மிதமான அளவில் சாப்பிடுவது முக்கியம். குறிப்பாக இரவு நேரத்தில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்கவும், பகல் அல்லது மதிய நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மொத்தத்தில், தினமும் ஒரு கொய்யா பழத்தை உணவில் சேர்த்தால், பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
