குறிப்பாக ஒரு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அளவில் பழங்களை அறிமுகப்படுத்துவது, அவர்களின் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. மேலும், வளரும் வயதில் குழந்தைகளின் கண் பார்வை, செரிமானம் மற்றும் மனநிலையையும் சீராக வைத்திருக்க பழங்கள் உதவுகின்றன.
மாம்பழம் மற்றும் பப்பாளி
மாம்பழம் மற்றும் பப்பாளி ஆகிய இரு பழங்களிலும் பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ அதிகமாக காணப்படுகிறது. இவை குழந்தைகளின் கண் பார்வையை தெளிவாக வைத்திருக்க உதவுகின்றன.
இன்றைய காலத்தில் அதிக நேரம் மொபைல் மற்றும் டிவி போன்ற ஸ்கிரீன்களை பார்க்கும் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ நிறைந்த உணவுகள் மிகவும் அவசியமாகிறது.
தர்பூசணி
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு தர்பூசணி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது. இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.உடல் சோர்வை குறைத்து சுறுசுறுப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
வாழைப்பழம்
எல்லா காலங்களிலும் எளிதாக கிடைக்கும் பழமாக வாழைப்பழம் உள்ளது. இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
மேலும், வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலம் நினைவாற்றலை பாதுகாக்க உதவுகிறது. கற்றல் திறனை மேம்படுத்தவும், மனநிலையை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கப்படும் வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.
ஆரஞ்சு
விட்டமின் சி அதிகம் கொண்ட பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது.
ஆரஞ்சில் உள்ள பிளாவனாய்டுகள் மூளையின் செயல்பாட்டை தூண்டி குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆப்பிள்
“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை" என்று கூறும் அளவுக்கு ஆப்பளில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆப்பிளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றன.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தவும் ஆப்பிள் பயனுள்ளதாக உள்ளது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளன. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், கண்களில் ஏற்படும் தொற்றுகளைத் தடுப்பதிலும் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திராட்சை மற்றும் ஸ்ட்ராபெரி
திராட்சை மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் பாதுகாப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த பழங்கள் மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
மாதுளை
மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
மேலும், புதிய நியூரான் செல்களின் வளர்ச்சியை தூண்டி குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
ஒரு வயது குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது நன்றாக மசித்து கட்டி இல்லாமல் கொடுக்க வேண்டும்.
முதலில் குறைந்த அளவில் கொடுத்து குழந்தைகளுக்கு ஒவ்வாமை அல்லது செரிமான பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதன் பிறகு மெதுவாக அளவை அதிகரிக்கலாம்.
பழச்சாறுகளில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து, தேவையானால் நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது.
தினமும் ஒரு பழம்
வளரும் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் குறைந்தபட்சம் ஒரு பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது.
இது மூளை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுத்து குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
