உடல் எடையைக் குறைக்கத் திட்டமிடுபவர்கள் நமது பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசியைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, மாப்பிள்ளை சம்பா அரிசியில் நிறைந்துள்ள இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் (Zinc) ஆகிய தாதுக்கள் நரம்புத் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகின்றன. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சர்க்கரை நோய் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் இது சீராகப் பராமரிக்கிறது.
தேவையான பொருட்கள்
- மாப்பிள்ளை சம்பா அரிசி அரை கப்
- தண்ணீர் மூன்று கப்
- பூண்டு பற்கள் 15
- வெந்தயம் ஒரு டீஸ்பூன்
- பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
- சுவைக்கேற்ப உப்பு
- ஒரு கப் கெட்டியான தேங்காய் பால்
செய்முறை
முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனைத் தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவிவிட்டு, சுத்தமான தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள அரிசியை அந்தத் தண்ணீருடனேயே குக்கரில் சேர்க்கவும்.
தொடர்ந்து அதில் தட்டிய பூண்டு பற்கள், வெந்தயம், பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். குக்கரை மூடி 7 முதல் 8 விசில் வரும் வரை வேக விடவும். அழுத்தம் குறைந்ததும் குக்கரைத் திறந்து, ஒரு மத்து கொண்டு சாதத்தை நன்கு மசித்து விடவும். இறுதியாக ஒரு கப் கெட்டியான தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து நன்கு கிளறினால், சத்துக்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா பூண்டு கஞ்சி தயார்.