பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனும், நடிகர் பிரபு அவர்களின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர். மேலும் அவர், தனது படத் தேர்வுகளில் சமீப காலமாக கவனமாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சிறை" படத்தின் வெற்றிக்குப் பிறகு பல இயக்குநர்களிடமிருந்து கதைகள் கேட்டிருந்தாலும், எந்தத் திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தை ரோமியோ பிக்செர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு புதுமுக இயக்குநரின் படத்திலும் விக்ரம் பிரபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
