மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பள்ளி சட்டம்பி'. இப்படத்தில் காயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இத்திரைப்படம், 1960 மற்றும் 70-களின் காலகட்ட பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் முதலில் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதி ஐந்து நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 15-ஆம் தேதி 'விஷு' திருநாளை முன்னிட்டு இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளாவில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழ-2' திரைப்படத்தின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 15-ஆம் தேதியைத் தொடர்ந்து வரும் தொடர் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி வசூலை ஈட்டும் நோக்கோடும் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
