நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. கருமாத்தூர் கிராமத்தில் யாருக்கும் அஞ்சாமல் வட்டித் தொழில் செய்யும் பவுனுத்தாயி (ராதிகா) கதாபாத்திரத்தைச் சுற்றி நகர்கிறது கதை. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழும் தாயின் நகைகளை அபகரிக்க மகன்கள் துடிக்கும் காட்சிகளும், இறுதியில் அவர்களுக்கு கிடைக்கும் பாடமும் நகைச்சுவையுடனும் எமோஷனலுடனும் சொல்லப்பட்டுள்ளது.
படத்தில் ராதிகாவின் கம்பீரமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோரின் காமெடி மற்றும் சென்டிமென்ட் காட்சிகளும், கமலின் பாடல்களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருப்பதும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன. பெண்களின் சொத்துரிமை மற்றும் சுதந்திரம் குறித்துச் சொல்லப்படும் கருத்துக்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மருமகள்களின் கதாபாத்திரங்கள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்றாலும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய தரமான படமாக 'தாய் கிழவி' அமைந்துள்ளது.
