1958 ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்ததாகக் கூறியுள்ள பார்த்திபன், தன்னிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றும், பள்ளிக் கல்வி முடித்த பின்பு தேவையான சான்றுகளை பெறவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், தனது சாதி மற்றும் மதத்தை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தற்போது தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், சாதி, மதம், மொழி போன்ற அடிப்படைகளில் ஏற்படும் பிளவுகள் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதால், சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் ‘சாதி, மதமற்றவர்’ எனும் சான்றிதழை வழங்குமாறு வேளச்சேரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார். பின்னர் அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும், எனவே குறிப்பிட்ட காலக்கெடுவில் தனது விண்ணப்பத்தை பரிசீலித்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் பார்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டாயுதபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதி, ஒரு வாரத்திற்குள் பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழை வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
