முன்னதாக, மஹாவதார் நரசிம்ஹ என்ற பெயரில் வெளியான முதல் அனிமேஷன் படம் பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான அந்த படம், தரமான அனிமேஷன் காட்சிகளும், புராணக் கதையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து சொன்ன விதமும் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. மேலும், ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி பெரும் சாதனையாக அமைந்தது.
தொழில்நுட்பம்
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத் தொடரில் இரண்டாவது படமாக ‘பரசுராமர்’ அவதாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படம் முழுக்க முழுக்க மேம்பட்ட VFX தொழில்நுட்பத்துடன் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை அஸ்வின் குமார் இயக்குவதுடன், ‘க்ளீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. மேலும், இசையமைப்பாளராக சாம் சிஎஸ் பணியாற்ற உள்ளார்.
மோஷன் போஸ்டர்
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் வெளியிட்ட மோஷன் போஸ்டரில், ரத்தம் தோய்ந்த போர்க்களத்தின் நடுவில் கோடாரி ஏந்திய உக்கிரமான போர்வீரனின் காட்சி இடம்பெற்றுள்ளது. “தர்மம் வீழும் போது பரசு எழுவான்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், தர்மம் மற்றும் அதர்மம் இடையேயான போராட்டத்தை மாபெரும் காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், “ஒரு ஆட்சியாளர் அல்ல; அதர்மத்திற்கு எதிரான சக்தி” என்ற வரிகளுடன், பரசுராமர் அவதாரத்தின் ஆழமான தத்துவத்தை படக்குழு வலியுறுத்தியுள்ளது.
பான் இந்திய மொழிகளில் உருவாகும் இந்த அனிமேஷன் படம், 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பமும், இந்திய பாரம்பரியமும் இணையும் இந்த ‘மகா அவதார்’ சினிமா, உலகத் தரத்தில் காட்சிப் பெருவிழாவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
