தமிழில் 'தம்பி', 'மதராஸி' போன்ற திரைப்படங்களின் மூலம் பரிச்சயமான பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன், தற்போது புதிய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். அவர் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான 'நடன சம்பவம்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் (Promotion) அவர் பங்கேற்கவில்லை என்பது புகாரின் சாரமாகும். பிஜூ மேனனின் இந்தச் செயலால் தமக்கு சுமார் 25 லட்ச ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அனூப் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் தரப்பு குற்றச்சாட்டும் பெஃப்காவின் நிலைப்பாடும்
திரைப்பட ஒப்பந்தத்தின்படி புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது ஒரு நடிகரின் கடமை என்றும், பிஜூ மேனன் வராததால் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்டவற்றிலிருந்து வரவேண்டிய தொகையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேரள திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான 'பெஃப்கா' அமைப்பின் தலைவர் பி.உன்னிகிருஷ்ணன் பேசுகையில், பிஜூ மேனன் பல திரைப்படங்களின் விளம்பர பணிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, தயாரிப்பாளர் சங்கம் பிஜூ மேனன் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அவர் மீது சட்டப்பூர்வமாக வழக்கும் தொடரப்பட உள்ளது.
