பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறுதணிக்கை இன்று சென்னையில் நடைபெறவிருந்த நிலையில், எதிர்பாராத காரணங்களால் அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் நடைபெறவிருந்த இந்த தணிக்கை நிகழ்வுக்காகப் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தணிக்கை அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்தச் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறுதணிக்கைக்கான புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், படத்தின் வெளியீட்டுப் பணிகளில் மீண்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம், தணிக்கை தொடர்பான சட்டச் சிக்கல்களால் நீதிமன்றம் வரை சென்றது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற்றுவிட்டு மறுதணிக்கைக்குப் படக்குழு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போதைய தாமதம் அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாலும், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலும், இந்தப் படம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் திரையரங்குகளில் வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
