இசை உலகின் ஜாம்பவான் இளையராஜா, தனது உலகப்புகழ் பெற்ற ‘வேலியன்ட்’ (Valiant) சிம்பொனி இசை நிகழ்ச்சியைச் சென்னையில் அரங்கேற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து இந்தச் சாதனையைப் படைத்த இளையராஜா, தற்போது அதே பிரம்மாண்டத்தை தமிழக ரசிகர்களுக்காக மே 30-ம் தேதி சென்னையில் நிகழ்த்த உள்ளார்.
ஆசியாவின் முதல் இசையமைப்பாளர்
சிம்பொனி இசையை சுயமாக எழுதி, அதனை உலகத்தரம் வாய்ந்த இசைக்குழுவை வைத்து அரங்கேற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்தச் சவாலை லண்டனில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியதன் மூலம், ஆசியக் கண்டத்திலேயே சிம்பொனி எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இளையராஜா தன்வசப்படுத்தினார். லண்டன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த இசைக்கோர்வை, இப்போது சென்னை மண்ணில் ஒலிக்கப் போகிறது.
‘ஃபிரம் ராஜா வித் லவ்’ – ஒரு சர்வதேச இசை அனுபவம்!
‘ஃபிரம் ராஜா வித் லவ்’ (From Raja With Love) என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த இசை விழாவில், சர்வதேச அளவிலான தலைசிறந்த கலைஞர்களும், உள்நாட்டு இசை மேதைகளும் இணைந்து நேரலையாக இசையமைக்க உள்ளனர். இளையராஜாவின் இசைப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் டிக்கெட் முன்பதிவு குறித்த கூடுதல் விவரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
