தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பியபோது திமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் அரசியலைத் தவிர்த்துவிட்டு தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவன தயாரிப்பில் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி
தனது அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா கூறியது உண்மைக்கு மாறான அவதூறு கருத்து என்று ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சினையில் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், மற்றும் கூட்டணி பேதமின்றி ஆதரவு தெரிவித்த அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், திரையுலகினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்ற வாசகத்துடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள அவர், 'ஜெய்ஹிந்த்' என அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
