இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, சமீபத்தில் டக்கர் கால்சன் என்பவருக்கு அளித்த நேர்காணலில் மேற்காசியப் பிராந்தியம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வரலாற்று ரீதியாகவும், பைபிள் கூற்றுப்படியும் ஒட்டுமொத்த மேற்காசிய நிலப்பரப்பின் மீது இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈராக்கின் யூப்ரடீஸ் நதி முதல் எகிப்தின் நைல் நதி வரை இடைப்பட்ட நிலப்பகுதிகள் அனைத்தும் ஆபிரகாமின் சந்ததியினருக்கே வழங்கப்பட வேண்டும் என பைபிளில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலப்பரப்பு முழுவதையும் இஸ்ரேல் தன்வசப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே தனது விருப்பம் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
விரிவடையும் எல்லைகளும் பிராந்திய பாதுகாப்பும்
மைக் ஹக்கபி குறிப்பிடும் இந்த எல்லைப் பரப்புக்குள் தற்போதைய லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியாவின் சில பகுதிகள் வருகின்றன. ஒரு முழு பிராந்தியத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இஸ்ரேல் தற்போதைக்கு அத்தகைய விரிவாக்கத்தைப் பற்றிப் பேசவில்லை என்றும், தனது கருத்துக்கள் ஓரளவுக்கு மிகையானவை என்றும் ஒப்புக்கொண்டார். இருப்பினும், போர்ச் சூழலில் இஸ்ரேல் தாக்கப்பட்டால், அந்தப் போரில் வெற்றி பெறுவதன் மூலம் அண்டை நாடுகளின் நிலங்களைக் கைப்பற்றுவது முற்றிலும் வேறொரு விவாதம் என்றும் அவர் மர்மமாகப் பதிலளித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்ற தலைவர்களும் எல்லை விரிவாக்கம் குறித்துப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்காவின் அழுத்தம்
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) முடக்குவதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதையும் மைக் ஹக்கபி உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ ஆகியோர் இந்த நீதிமன்றத்தை அகற்றத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையைத் தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்கள் சட்டத்தைச் சமமாகப் பயன்படுத்தாமல், முரட்டுத்தனமான அமைப்புகளாக மாறிவிட்டதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்க தூதரின் இந்தத் தொடர் கருத்துக்கள் மேற்காசிய அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
