மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது நட்பு நாடுகளான இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுமார் 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நாடுகள் தற்போது சந்தித்து வரும் அவசர பாதுகாப்பு தேவைகளைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக நடத்தப்படும் நாடாளுமன்ற ஆய்வுகளிலிருந்து இந்த விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாடுகள் வாரியாக ஆயுதப் பகிர்வு மற்றும் பிராந்திய போர் சூழல்
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கத்தாருக்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும், 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளும் வழங்கப்பட உள்ளன. குவைத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பும், இஸ்ரேலுக்கு 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ஆயுத அமைப்புகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 147.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தொடர் மோதல்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்கவே வளைகுடா நாடுகள் தற்போது அமெரிக்காவிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
