மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளது. ஈரானில் "முக்கிய ராணுவ நடவடிக்கைகள்" தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்குக் கடும் பதிலடி கொடுத்துள்ள ஈரானின் புரட்சிப் படை, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போர் சூழல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், கத்தாரில் ஒரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியிலும் வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
