அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதாரச் சுமையைக் குறைக்க அமெரிக்கா கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது.
இந்தத் தளர்வின்படி, ஏப்ரல் 11-ம் தேதி வரை ரஷ்ய எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரஷ்யா தனது எண்ணெய் வர்த்தகத்தை அதிகரித்துக் கொண்டதுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் போரால் காலியாக இருந்த தனது கருவூலத்தையும் நிரப்பிக் கொண்டது. தற்போது மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளதால், ரஷ்யாவின் வருமானத்தைத் தடுக்கும் பொருட்டு அதன் எண்ணெய் மீதான தடைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என ஜெலென்ஸ்கி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
