பிரிட்டனில் வருங்கால சந்ததியினரைச் சீரழிக்கும் புகைப்பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான ‘புகையிலை மற்றும் வேப்ஸ்’ மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனை செய்வதற்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. அதாவது, தற்போது 17 மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் இனி பிரிட்டனில் சட்டப்பூர்வமாகச் சிகரெட் வாங்க முடியாது. இந்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தங்களது முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளன.
சுகாதாரத் துறையின் முக்கிய மைல்கல்
இந்த வரலாற்று முடிவை வரவேற்றுள்ள பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், நாட்டின் சுகாதார வரலாற்றில் இது ஒரு பொன்னான தருணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். புகைப்பழக்கமே இல்லாத முதல் தலைமுறையை உருவாக்குவதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, 2022-ஆம் ஆண்டு நியூசிலாந்து இத்தகைய தடையைக் கொண்டுவந்தாலும், 2023-ல் அங்குப் புதிதாக அமைந்த அரசு அந்தச் சட்டத்தை ரத்து செய்தது. அதேபோல், மாலத்தீவும் கடந்த ஆண்டு 2007-க்குப் பிறகு பிறந்தவர்களுக்குச் சிகரெட் விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
