ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பெருநாள் தொழுகையானது பாதுகாப்பு காரணங்களுக்காக மசூதிகளுக்குள் மட்டுமே நடத்தப்படும் என்று இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளை மற்றும் ஜகாத் பொது ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வழக்கமாக திறந்தவெளி மைதானங்கள் அல்லது பொது இடங்களில் நடத்தப்படும் தொழுகை கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, வழிபாட்டுச் சேவைகள் அனைத்தும் மசூதிகளுக்குள் மட்டுமே நடைபெறும் என்று அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் துபாய் மற்றும் ஷார்ஜாவின் இஸ்லாமிய விவகாரத் துறைகளும் உரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. பெருநாள் தொழுகைக்கு வருபவர்கள்பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, முன்கூட்டியே மசூதிகளுக்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் நிகழ்வு ரமலான் 29-ம் தேதியான இன்று, அதாவது மார்ச் 18 (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இன்று பிறை தென்பட்டால் மார்ச் 19 வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும். ஒருவேளை இன்று பிறை தென்படாவிட்டால் ரமலான் 30 நாட்கள் நிறைவுபெற்று மார்ச் 20 வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும். தற்போதைய வானியல் கணிப்புகளின்படி இந்த ஆண்டு ரமலான் 30 நாட்கள் நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளதால், பெருநாள் மார்ச் 20-ம் தேதி அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
