கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் 14-ஆம் லியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். போப் ஒரு தாராளவாதி என்றும், அவர் ஆன்மீகக் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்த ட்ரம்ப், ஈரானுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டையும் சாடினார். அணு ஆயுத விவகாரத்தில் எதிரி நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் மதத் தலைவரைத் தம்மால் ஏற்க முடியாது என அவர் நேரடியாகத் தெரிவித்தார்.
இந்த விமர்சனங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, தன்னை இயேசுவைப் போன்ற தோற்றத்தில் காட்டும் ஏஐ புகைப்படத்தை ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். விவிலிய காலத்து அற்புதங்களைச் செய்வது போலவும், அவரது கைகளிலிருந்து ஒளி வீசுவது போன்றும் அந்தப் படம் அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கக் கொடிகள் மற்றும் தேவதூதர்களின் உருவங்கள் சூழ உள்ள அந்தப் புகைப்படம், போப்பின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
