அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் போட்டியிட உள்ளார். இதன் மூலம் வாஷிங்டன் டிசி மேயர் பதவிக்குப் போட்டியிடும் முதல் தெற்காசியப் பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது 7 வயதில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ரினி சம்பத், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டனில் வசித்து வருகிறார். 31 வயதான இவர், தற்போது ஜனநாயகக் கட்சி சார்பில் அரசு ஒப்பந்தக்காரராகப் பணியாற்றி வருகிறார்.
புதிய தலைமையின் அவசியம்
“அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம்”, “புதிய வாஷிங்டன் டிசி” ஆகிய முழக்கங்களுடன் ரினி சம்பத் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிரச்சாரம் குறித்துப் பேசிய அவர், “நான் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல; எந்தவொரு குறிப்பிட்ட அதிகாரக் குழுக்களுக்கும் கட்டுப்பட்டவளும் அல்ல. நகரின் அடிப்படைச் சேவைகளைச் சீரமைக்க வேண்டிய தருணம் இது. அதற்கு ஒரு புதிய தலைமை அவசியம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சாலை வசதிகள், குடிநீர் வழங்கல் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்தல் ஆகியவற்றைத் தனது முதன்மை இலக்குகளாக அவர் முன்வைத்துள்ளார்.
அரசியலில் இந்தியர்களின் எழுச்சி
ஏற்கனவே சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை எனத் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அரசியலிலும் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மேயர் தேர்தலில் போட்டியிடத் தேவையான 4,500 வாக்காளர்களின் கையெழுத்துகளைத் திரட்ட வேண்டிய நிலையில், ரினி சம்பத் அதற்கும் மேலாக இருமடங்கு கையெழுத்துகளைப் பெற்றுத் தகுதி பெற்றுள்ளார். வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்தலில் (Primary Election) அவர் வெற்றி பெற்றால், நவம்பர் மாதம் நடைபெறும் இறுதி மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும். தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அமெரிக்க அரசியலில் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என ரினி உறுதியளித்துள்ளார்.
