சிங்கப்பூர் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளைப் போக்கவும் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் சிறப்பான திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.
ஊழியர்களுக்கான பாதுகாப்பு:
YouTube தளத்தில் வெளியிட்டுள்ள புதிய காணொளி ஒன்றில் பேசிய பிரதமர், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் ஊழியர்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்க அரசாங்கம் துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.
அதில் வேகமாக மாறிவரும் வேலைச் சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூரர்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்கப்படும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் ஊழியர்களின் போட்டித்திறன் அதிகரிக்கப்படும், சிங்கப்பூரர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய தரமான வேலைகளைப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என தெரிவித்து உள்ளார்.
பொருளாதார நிலை:
கடந்த 2025-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டதுடன், வேலைவாய்ப்புச் சந்தையும் மிகவும் வலுவாக இருந்ததாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எதிர்கால நிச்சயமற்ற நிலையைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை இந்த பட்ஜெட் கொண்டிருக்கும் எனத் தெரிவித்தார்.
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், நாளை (பிப்ரவரி 12) பிற்பகல் 3.30 மணி அளவில் நாடாளுமன்றத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உள்ளார்.
