ஈரான் நாகரிகமே ஒரே இரவில் அழிக்கப்படும் என்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் எச்சரிக்கையால் மேற்காசியா பெரும் போரின் விளிம்பிற்கே சென்றது. அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய 90 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:30 மணிக்கு ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருந்தன. ஈரானின் உள்கட்டமைப்புகளைக் காக்க அந்நாட்டு மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து உயிர்த்தியாகத்திற்குத் தயாராக இருந்த சூழலில், போர் மேகங்கள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
பாகிஸ்தானின் சமரச முயற்சி
இக்கட்டான இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட அதிரடி ராஜதந்திர நடவடிக்கைகள் போரை நிறுத்தும் கருவியாக மாறின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக, இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பாகிஸ்தானின் இந்த முன்மொழிவை அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். இது அமெரிக்கா பின்வாங்கியதாகவோ அல்லது ஈரான் சரணடைந்ததாகவோ கருதப்படாத வகையில் ஒரு நடுநிலையான தீர்வாக அமைந்தது.
அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதியின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை 14 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் 11 மணி நேரத் தொடர் முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் சாத்தியமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, முடக்கப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை
மேற்காசியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஷெபாஸ் ஷெரீப், இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கத் தலைவர்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். உலக வல்லரசு நாடுகள் தயங்கிய வேளையில், பாகிஸ்தானின் இந்த முன்னெடுப்பு சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
