ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டதை வடகொரியா அங்கீகரிப்பதோடு, அந்த நாட்டின் இறையாண்மையை மதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா காமேனி அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஈரானிய மக்களின் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்த முடிவு என்று வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மத்திய கிழக்கின் அமைதி மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைப்பதாக வடகொரியாவின் செய்தி நிறுவனம் (KCNA) சாடியுள்ளது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பிலும், அதன் சமூக ஒருமைப்பாட்டிலும் தலையிட்டு அழிவை ஏற்படுத்த முயலும் இந்த நாடுகளின் செயலை உலக நாடுகள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்றும், இதனை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது.
அணுசக்தி திட்டங்களைக் கைவிடச் சொல்லி அமெரிக்கா பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அணு ஆயுதத் தயாரிப்பில் வடகொரியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் புதிய தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வடகொரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
