மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் எவ்வித சமரசப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தவறான கொள்கைகளால் இந்தப் பிராந்தியம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானியப் படைகள் எந்தப் படையெடுப்பையும் தொடங்கவில்லை என்றும், தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் வலிமை ஈரானுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓமன் அரசு முன்னிலையில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மறுபுறம், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைத்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு மேலே இஸ்ரேலியப் போர் விமானங்கள் பறந்து, அங்குள்ள பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள், ராணுவத் தலைமையகங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கி அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வான்வெளியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (Drones) இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடைமறித்து அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பகுதியில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
