அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) செயல்படுத்தி வரும் 'ஆர்டெமிஸ்-II' விண்கலம், நிலவை மிக நெருக்கமாகச் சென்றடைந்து வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஒரியன் (Orion) விண்கலம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நிலவைச் சுற்றும் இந்தப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் விண்வெளியிலிருந்தே 'முழு சூரிய கிரகணத்தை' நேரடியாகக் கண்டுள்ளனர். இது குறித்த பிரமிக்க வைக்கும் வீடியோவை நாசா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து அதிக தூரம் பயணம்
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட ஒரியன் விண்கலம், நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இந்தப் பயணத்தின் மூலம், வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக அதிகத் தொலைவிற்குப் பயணித்த மனிதர்கள் என்ற புதிய உலக சாதனையை இந்த நான்கு விண்வெளி வீரர்களும் படைத்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் நிலாவை நெருங்காத நிலையில், ஆர்டெமிஸ்-II திட்டம் அதனை மீண்டும் சாத்தியமாக்கியுள்ளது.
தொடர்பு துண்டிப்பும் சவால்களும்
இந்த விண்கலம் நிலவின் மறுபக்கத்தைக் கடந்த தருணத்தில், சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிலாவே சிக்னல்களைத் தடுக்கும் தடையாக அமைவதால், கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ராட்சத ஆண்டனாக்கள் (Deep Space Network) மூலமாகவும் அந்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகக் காணும் முதல் மனிதர்கள் என்ற பெருமையும் இந்தக் குழுவிற்கு கிடைத்துள்ளது.
திட்டத்தின் மதிப்பும் எதிர்கால இலக்கும்
சுமார் ₹8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவில் தரையிறக்கும் நாசாவின் கனவுத் திட்டமாகும். வரும் 2028-ஆம் ஆண்டில் நிலவில் மனிதர்களைத் தரையிறக்குவதே இதன் முக்கியக் குறிக்கோள். 'ட்ரான்ஸ் லூனார் இன்ஜெக்ஷன்' (Trans-Lunar Injection) எனப்படும் எஞ்சின் எரிப்பு தொழில்நுட்பம் மூலம் நிலவை நோக்கிச் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், விண்வெளி வீரர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் விண்கலத்தின் செயல்திறனை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
பூமிக்குத் திரும்புதல்
மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணம் முடிவில், விண்கலம் பசிபிக் பெருங்கடலில் சான் டியாகோ அருகே தரையிறங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி எதிர்காலத்தில் நிலவில் தளம் அமைப்பதற்கும், செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கும் ஒரு முன்னோடியாக அமையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
