அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-2' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த 1971-ஆம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் கடைசியாக நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது எஸ்.எல்.எஸ் (SLS) ராக்கெட் உதவியுடன் ஓரியான் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் கிளேவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகிய நான்கு பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விண்வெளி வீரர்கள் மொத்தம் 10 நாட்கள் பயணமாக நிலவை நோக்கிச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பதிலாக, நிலவைச் சுற்றி சுமார் 6 லட்சம் மைல்கள் தூரம் பயணித்து நிலவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடிப்பதே இவர்களின் முக்கியப் பணியாகும். எதிர்கால நிலவுப் பயணத் திட்டங்களுக்குத் தேவையான மிக முக்கியமான தரவுகளையும் தகவல்களையும் இந்த ஆய்வின் மூலம் அவர்கள் சேகரிப்பார்கள். தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு நிலவைச் சுற்றி வந்த பிறகு, வரும் 11-ஆம் தேதி ஓரியான் விண்கலம் பாராசூட் உதவியுடன் பசிபிக் கடலில் வந்து விழும். அங்கு தயாராக இருக்கும் அமெரிக்க கடற்படையினர் விண்கலத்தையும் வீரர்களையும் மீட்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
