இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது விருப்பப்படி, அவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. நல்லகண்ணுவின் மறைவுக்கு கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நல்லகண்ணுவின் மறைவிற்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், "பொது வாழ்வில் இருப்பவர்கள் எவ்வாறு தூய்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணப் புருஷனாக திகழ்ந்தவர் தான் நல்லகண்ணு. இனி வரும் அரசியல் தலைவர்களுக்கு நல்லகண்ணுவை சிறந்த முன்னுதாரணமாக காட்ட வேண்டும். இந்த தலைமுறையின் மிக நேர்மையான சிறந்த அரசியல் தலைவர் நல்லகண்ணு. உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய மலேசியத் தமிழர்களின் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
