மலேசியாவின் சபா மாநிலத்தின் கடற்கரையோர கிராமம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரிட்ட கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 தற்காலிக வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சபா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சந்தக்கான் (Sandakan) மாவட்டத்தின் 'நீர் கிராமம்' (Water Village) எனப்படும் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இங்குள்ள மரத்தாலான வீடுகள் கடலில் நடப்பட்ட தூண்களின் மேல் ஒன்றோடு ஒன்று ஒட்டி நெருக்கமாகக் கட்டப்பட்டிருந்ததே தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது.
9,000 பேர் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்
இந்த விபத்து குறித்து சந்தக்கான் காவல்துறைத் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரக்மான் கூறுகையில், "மிகவும் பயங்கரமான மற்றும் இதயத்தை உலுக்கும் இந்தச் சம்பவத்தால் சுமார் 9,007 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். மலேசியாவின் மிகவும் ஏழ்மையான மக்கள், பழங்குடியினர் மற்றும் குடியுரிமை இல்லாத சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் இப்பகுதியில், தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து சுமார் 37 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புப் பணியில் எதிர்கொண்ட சவால்கள்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி) இந்தத் தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த 1,000 வீடுகளும் 100 சதவீதம் எரிந்துவிட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. குறுகலான பாதைகள் காரணமாகத் தீயணைப்பு வாகனங்களால் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியவில்லை. மேலும், கடலில் அலைகள் உள்வாங்கியிருந்ததால் (Low tide) தண்ணீரைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதோடு, பலத்த காற்றும் தீயைச் சூறாவளி போல் பரவச் செய்தது. எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது ஒரு நிம்மதியான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் அவசர உதவி
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான தற்காலிகத் தங்குமிடங்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு சபா மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.