மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், கெடா (Kedah) மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் 'லெவல் 2' (Level 2) அளவிலான வெப்ப அலை வீசி வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, மலேசிய வாழ் மக்கள் மற்றும் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கெடா மாநிலத்தில் உச்சகட்ட வெப்பம்
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, கெடா மாநிலத்தின் போகோக் செனா (Pokok Sena), பெண்டாங் (Pendang) மற்றும் பாலிங் (Baling) ஆகிய மூன்று மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் போது இந்த 'லெவல் 2' வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
எச்சரிக்கை வளையத்தில் 16 பகுதிகள்
இது தவிர, தீபகற்ப மலேசியாவின் 16 பகுதிகள் 'லெவல் 1' (Level 1) விழிப்புணர்வு நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கெடா மாநிலத்தின் சிக், பாடாங் தெரப், குபாங் பாசு, லங்காவி, கோலா மூடா, குலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகளும், பெர்லிஸ் மாநிலம் முழுவதுமே இந்த எச்சரிக்கை வளையத்தில் உள்ளன. மேலும், பினாங்கு (Penang) மாநிலத்தின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
பேராக் (Perak) மாநிலத்தின் ஹுலு பேராக், செலாமா, கிந்தா, கோலா கங்சார் மற்றும் பகாங் (Pahang) மாநிலத்தின் ஜெராண்டுட், ராவ் ஆகிய மாவட்டங்களிலும் வெப்ப நிலை 35 முதல் 37 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகி வருவதால் 'லெவல் 1' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நிலவும் இந்த அசாதாரண வெப்பநிலையால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
