மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய அரசு தற்போது 'நெருக்கடி நிலையில்' (Crisis Mode) செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, தேசிய பொருளாதார நடவடிக்கை குழு (NEAC) வாரந்தோறும் கூடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100% உயர்ந்த எரிசக்தி விலை
கேபினட் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எரிசக்தி செலவுகள் (Energy Costs) 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இது குறித்துப் பேசிய அமைச்சர் லோக், "இது விளையாட்டான விஷயம் அல்ல, மிகவும் சீரியஸான ஒரு சூழல். இந்த மோதலால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஏற்கனவே எரிசக்தி அவசரநிலையை அறிவித்துவிட்டது. அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது," என்று எச்சரித்துள்ளார்.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்
மலேசியாவில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றாலும், நிலைமை மோசமாவதைத் தவிர்க்க மக்கள் இப்போதே சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பயணத் திட்டம்: பெட்ரோல் மானியம் வழங்கப்படுவதால் மலேசியர்கள் வாகனப் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இனி தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முடிந்தவரைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பகிர் பயணம் (Carpool): நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 'கார்பூலிங்' செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
உணவு விரயம்: எரிபொருள் மட்டுமல்லாது உணவு விரயத்தையும் குறைக்க வேண்டும். தற்போது கோழி மற்றும் முட்டை இருப்பு தாராளமாக இருப்பதால், புரதச் சத்து உணவுகளைப் போதுமான அளவு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் உணவைக் குப்பையில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
எரிபொருள் இருப்பு எவ்வளவு?
மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலியையே சார்ந்துள்ளது. தற்போதைய சூழலில் மே மாதம் வரை எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால், ஈரான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றங்களால் போர் நீடித்தால், மே மாதத்திற்குப் பிறகு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
