ஈரான் உச்சகட்டத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளை ஈரான் அரசு மறுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் உள்ள காமேனியின் வளாகத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) இந்தத் தகவல்களை மறுத்துள்ளார். NBC செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "எனக்குத் தெரிந்தவரை அலி காமேனி உயிருடன் தான் இருக்கிறார்" என உறுதிப்படுத்தினார். மேலும், தாக்குதலில் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
நீதித்துறையின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தாக்குதலில் இருந்து தப்பித்துவிட்டதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
காமேனி உரையாற்ற உள்ளார்
தாக்குதல் குறித்து ஆயத்துல்லா அலி காமேனி விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஈரானின் அல்-ஆலம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
