அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான ஐந்தாம் தலைமுறை F-35 ரக விமானத்தை, ஈரான் தனது உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் விமானம் மிகப்பெரிய வெடிப்புடன் கீழே விழுந்ததால் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19-ஆம் தேதி ஏற்கனவே ஒரு F-35 விமானத்தை ஈரான் வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்காவின் நவீன போர் விமானம் ஈரான் படையால் அழிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones) தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் அங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதை குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உறுதி செய்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் போர் அச்சத்தை அதிகரித்துள்ளன.
இதனிடையே, நிலவி வரும் மோதல் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், அழிவைத் தரும் போரை விடுத்துத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்ட அவர், ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
