ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் படுகொலைக்குத் திரைமறைவில் முற்றுப்புள்ளி வைக்காமல், ஈரான் தனது நேரடிப் போர் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்ட 'யுஎஸ்எஸ் லிங்கன்' (USS Lincoln) போர்க்கப்பலை இலக்கு வைத்து, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஈரானின் புதிய இடைக்காலத் தலைவர்
சனிக்கிழமை தெஹ்ரானில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 86 வயதான காமேனி, பாதுகாப்பு அமைச்சர் அமீர் நாசர்சாதே மற்றும் ராணுவத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதை ஈரான் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தை வழிநடத்த மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி (Ayatollah Alireza Arafi) இடைக்கால உச்ச தலைவராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ள துபாய், அபுதாபி, தோஹா மற்றும் மனாமா ஆகிய நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை ஏவி வருகிறது. குறிப்பாக, துபாயில் சிஐஏ (CIA) அலுவலகம் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு கட்டிடம் பயங்கரத் தீப்பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளன. இதற்கிடையில், ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களைத் தாங்கள் செயலிழக்கச் செய்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் பதிலுக்குத் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவுத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
