ஹைதி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'லாஃபெரியர் சிட்டாடல்' மலைக்கோட்டையில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில், ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
நிமிடத்தில் மாறிய காட்சிகள்
விழா உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். குறுகிய பாதைகளில் ஏற்பட்ட இந்த அதீத நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத்திணறியும், மிதிப்பட்டும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு
இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் அலிக்ஸ் டிடியே ஃபில்ஸ் அய்ம் தலைமையிலான அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றில் இவ்வளவு பெரிய விபத்து நேர்ந்தது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. போதிய கூட்ட நெரிசல் மேலாண்மை செய்யப்படாததே இதற்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
