பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பெண் ஒருவர் சுமத்தியுள்ள அதிரடி புகார்கள் அடங்கிய ரகசியக் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு எப்பிஐ (FBI) அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, அந்தப் பெண் அளித்த திடுக்கிடும் வாக்குமூலங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தமக்கு சுமார் 13 முதல் 15 வயது இருக்கும் போதே, எப்ஸ்டீன் மூலம் ட்ரம்ப் தமக்கு அறிமுகமானதாகவும், அதன் பிறகு அவர் தமக்கு உடல்ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். நியூஜெர்சிக்குத் தன்னை அழைத்துச் சென்ற எப்ஸ்டீன், அங்கு ட்ரம்ப்புக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது நிகழ்ந்த பாலியல் அத்துமீறலைத் தடுக்க முயன்று ட்ரம்ப்பைக் கடித்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசக் கூடாது எனத் தமக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த அனைத்துப் புகார்களையும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதே சமயம், ட்ரம்ப்புக்கு அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய முக்கியத் தரவுகளை ட்ரம்ப் நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிபர் தேர்தல் தொடர்பான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த எப்ஸ்டீன் விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
