அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றிய அவர், இந்தத் தாக்குதலை ஒரு வரலாற்றுத் துரோகம் என்று வர்ணித்தார். மேலும், ஈரானின் மிக உயரிய அதிகார மையத்தை அழித்ததன் மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு போரைத் தொடங்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
சட்டபூர்வமான கடமை: ஈரான் அரசு அறிவிப்பு
"எங்கள் தலைவரை இழந்ததற்குப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான உரிமை மட்டுமல்ல, அது எங்கள் புனிதமான கடமையும் கூட" என்று அதிபர் பெசெஷ்கியன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் இதனை அரங்கேற்றியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தகுந்த தண்டனையை அனுபவிப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட இந்தச் சவாலை ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது என ஈரான் அரசு நிர்வாகம் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான போர் அறிவிப்பு
ஷியா பிரிவின் உலகளாவியத் தலைவராகவும், ஈரானின் அரசியல் அடையாளமாகவும் திகழ்ந்த கமேனியின் படுகொலை, ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட நேரடிப் போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள ஷியா முஸ்லிம்களை ஒடுக்கும் முயற்சியாகவே இதைப் பார்ப்பதாகவும், இந்த அநீதிக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
