துபாயில் அமைந்துள்ள பிரம்மாண்டமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்தில், தமிழின் பெருமைமிகு இலக்கியமான திருக்குறளின் அரபி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. திருக்குறளை இந்த இரு மொழிகளிலும் மொழிபெயர்த்த முதல் தமிழர் என்ற பெருமைக்குரிய பேராசிரியர் ஏ. பஷீர் அஹமது ஜமாலியின் நூல்களை, துபாயைச் சேர்ந்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நூலக அலுவலர் அமீரா பஹத் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ் நூல்களைத் தொடர்ந்து நூலகத்திற்கு வழங்கி வரும் முயற்சிக்கு நூலக நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பணிக்காக, பேராசிரியர் பஷீர் அஹமது ஜமாலி திருக்குறளை மூலத் தமிழில் இருந்து அரபி மொழிக்கு மொழிபெயர்த்தார். கவிதை நயம் மாறாமல் சர்வதேச அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்த இந்த நூல், கடந்த 2022 ஆம் ஆண்டு வாரணாசியில் நடைபெற்ற 'காசி தமிழ்ச் சங்கமம்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
