அலெக்சி நவால்னி சிறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 பிப்ரவரி 17ஆம் தேதி திடீரென உயிரிழந்த நவால்னியின் மரணம் உலகளவில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அவரது உயிரிழப்பு குறித்து ஆரம்பத்தில் தெளிவான விளக்கம் வெளியிடப்படவில்லை.
‘விஷம் கலந்த தாக்குதல்’ – மனைவியின் குற்றச்சாட்டு
நவல்னியின் மனைவி யூலியா நவால்னியா, தனது கணவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக முன்பே குற்றஞ்சாட்டியிருந்தார். ரஷ்யாவிலிருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட உடற்கூறு மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவை விஷத் தாக்குதலை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், ரஷ்ய சிறை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, நவால்னி இயல்பான காரணங்களால் மரணமடைந்தார் என்று தெரிவித்தது.
5 ஐரோப்பிய நாடுகள் உறுதி
இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நவால்னியின் உடலில் ‘எபிபாட்டிடின்’ (Epibatidine) என்ற நச்சுப் பொருள் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்ததாக தெரிவித்துள்ளன.
இந்த நச்சு இயற்கையாக சில டார்ட் தவளைகளில் காணப்படுவதுடன், ஆய்வகத்திலும் தயாரிக்க முடியும் என கூறப்படுகிறது. இது மூச்சுத்திணறல், வலிப்பு மற்றும் இதய துடிப்பு குறைவு போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
சர்வதேச சட்ட மீறல் குற்றச்சாட்டு
மேற்கண்ட நாடுகள், இந்தச் சம்பவம் சர்வதேச சட்டங்களையும், ரசாயன ஆயுத ஒப்பந்தங்களையும் மீறுவதாகக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.
‘கொலை என்பது அறிவியல் மூலம் நிரூபணம்’ – யூலியா
இதுகுறித்து யூலியா நவால்னியா, “இது ஒரு கொலை என்ற என் நம்பிக்கை இன்று அறிவியல் ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நவால்னியின் மரணம் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் கடும் விவாதம் கிளம்பியுள்ளது.
