தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருக்க, விஜய் தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக நின்று மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் தொகுதி கண்காணிப்பாளர்கள் நியமனம் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி வேலூரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுக விவகாரமும் விஜய்யின் முடிவும்!
பெரம்பூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் தேர்தல் களம் குறித்து ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். துறைமுகப் பகுதியில் அமைதியான முறையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றில் அடித்த சம்பவம் விஜய்யை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அந்தத் தருணத்திலேயே, இந்த அநீதிக்கு எதிராக வடசென்னை மண்ணில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்ற முடிவை விஜய் எடுத்துவிட்டதாக ஆதவ் அர்ஜூனா ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஆணவ அரசியலுக்கு மக்கள் தீர்ப்பே முடிவு!
திமுக - தவெக நேரடிப் போட்டி?
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆதவ் அர்ஜூனா, வெறும் அறிக்கைகள் வெளியிடுவதும், திடீர் போராட்டங்களை நடத்துவதும் விஜய்க்கு உடன்பாடான அரசியல் அல்ல என்று விளக்கினார். "மக்களால் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆணவ அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று எச்சரித்த அவர், அதிகாரத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே தவெக-வின் கொள்கை என்றும் முழங்கினார்.
சட்டமன்றத் தேர்தலில் தனது பிரதான போட்டியே திமுகதான் என்று விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் வடசென்னையில் போட்டியிடுவார் என்ற ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்த அதிரடி நகர்வு, குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகிறது. தொண்டர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
