கோவிந்த நல்லூரை சேர்ந்த முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா பட்டாசு ஆலை”யில் நேற்று மாலை சுமார் 3.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்த போதிலும், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சரவெடி அறையில் விபத்து
சரவடி தயாரிப்பு நடைபெற்ற அறையில் ஏற்பட்ட தீப்பற்றி, அடுத்தடுத்த அறைகளுக்கு வேகமாக பரவி, பெரும் வெடி விபத்தாக மாறியது. இந்த விபத்தில் நான்கு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அறைகள் இடைவெளி விதிமுறைகளுக்கு புறம்பாக ஒரே கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து நேரத்தில் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
மீண்டும் வெடிவிபத்து
இதற்கிடையில், மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது மேலும் ஒரு சிறிய வெடிவிபத்து ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறவினர் போராட்டம்
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள், உரிய நிவாரணம் வழங்கும் வரை உடல்களை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
விடுமுறைத்தினத்தில் ஆலை
இந்நிலையில் விபத்து நடந்த பட்டாசாலை விடுமுறை தினத்தில் அனுமதியின்றி இயங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், பட்டாசாலை உரிமையாளரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விபத்து காரணம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும் இந்த விபத்து, பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
