தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மூன்று மாத முன்பணம் மற்றும் கோடைக் காலச் சிறப்புத் தொகை என மொத்தம் 5,000 ரூபாய் 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகளால் இந்தத் தொகை முடக்கப்படலாம் என்பதால், முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்த அதிரடி அறிவிப்பின் பின்னணியில் அரசியல் அச்சம் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் எழுப்பும் கேள்விகள்
தனது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள விஜய், வழக்கமாக மாதந்தோறும் 15-ஆம் தேதி வழங்கப்படும் உரிமைத் தொகை, இந்த முறை திடீரென 13-ஆம் தேதியே வழங்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா?" எனக் கேட்டுள்ள அவர், திடீரென 2,000 ரூபாய் சிறப்புத் தொகை அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கு கிடைத்து வரும் பேராதரவு குறித்த அச்சமே ஒளிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவை இயக்கும் அரசியல் பெருவிசை நாமே
திமுக அரசுக்குத் தேர்தல் தோல்வி குறித்த பயத்தை ஊட்டும் வகையில் தமிழ்நாட்டு மகளிர் காட்டி வரும் ஆதரவிற்கு விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். "திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசை நாம்தான்" என்று முழங்கியுள்ள அவர், தவெக-வை மட்டுமே தனக்குப் போட்டியாகவும், தன்னை வெல்லப்போகும் சக்தியாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருதுவதை இந்த அவசர கால அறிவிப்பு உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக வருகையின் தாக்கத்தால் கிடைத்த பலன்
தன்னுடைய அரசியல் வருகையின் தாக்கத்தாலேயே இந்தத் தொகை பெண்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், "உங்கள் மகன் மற்றும் சகோதரனின் வருகையால் கிடைத்த இந்தத் தொகையைச் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள்" எனத் தாய்மார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுபவர்களைப் போலன்றி, தவெக ஆட்சி மலர்ந்ததும் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் அனைத்து நன்மைகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
