விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில், தற்போது முழுப்படமும் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இச்சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் திரையுலகையும் நிலைகுலையச் செய்துள்ளது. இது தொடர்பாகப் படக்குழு அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தற்போது 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
முதலில் படத்தின் சில காட்சிகள் மட்டும் வெளியான நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே முழுப் படமும் இணையத்தில் கசிந்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படக்குழுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளதோடு, நடிகர் சங்கமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் கசிந்த படத்தை யாரும் பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் எனப் படக்குழுவினர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல சோதனைகளைச் சந்தித்து வரும் இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
