தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். விவசாயம் செழிக்கும் சோழ வளநாட்டின் அடையாளமாகத் தனது தோளில் பச்சைத் துண்டு அணிந்து அவர் மேடையேறியது தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த உறவு தேர்தலுக்காக உருவானது அல்ல, இது மக்களுடனான ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு என்று குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் தவெக-விற்கு ஒரு வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு பூத்திலும் புயலாக உழைக்க வேண்டும் எனத் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகளின் துயரம்
மேடையில் பேசிய விஜய், விவசாயிகளின் மகத்துவத்தைப் போற்றியதோடு, "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் விவசாயியாகப் பிறக்கவே விரும்புகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். டெல்டாக்காரன் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது தனது கட்சிதான் என்பதை நினைவு கூர்ந்தார்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு இல்லாமை மற்றும் தங்கு தடையின்றி நடைபெறும் மண், மணல் கொள்ளையே நீர் நிலைகள் திவாலாகக் காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், இந்த மணல் மாஃபியாக்களுக்கு திமுக அரசுதான் பின்புலமாக இருக்கிறது எனத் பகிரங்கமாகச் சாடினார்.
திமுக அரசு மீதான காட்டமான விமர்சனம்
திமுக ஆட்சியில் விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணானதைச் சுட்டிக்காட்டிய விஜய், ஆட்சி முடியும் தருவாயில் மட்டும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றும் போக்கை ஆளுங்கட்சி கைவிட வேண்டும் என்றார். மீனவர் பிரச்சினையில் வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு உறங்கும் போக்கை விமர்சித்த அவர், தவெக ஆட்சியில் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், திமுக இரண்டாம் முறை ஆட்சிக்கு வருவது என்பது சரித்திரத்தில் இல்லாத ஒன்று என்றும், அந்த சாதனையைக் கருணாநிதியாலேயே செய்ய முடியவில்லை என்றும் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
